அகஸ்திய குலபதி ஸ்ரீ ஸக்தி சுமனன்
பாயிரம் · மந்திரம் 2

கடவுள் வாழ்த்து

ஒன்றில் தொடங்கி எட்டில் முடியும் பிரபஞ்ச உருவாக்கம்
📜
பகுதி 1 ஸ்ரீ ஸக்தி சுமனனின் யோக ஆகம தந்திர அனுபவ விளக்கவுரை

இந்தப் பாடலில் மூலனார் மூன்று மறைபொருள் விஷயத்தை சுருக்கி வைத்துள்ளார்.

இந்தப் பாடல் ஒரு மூன்று அடுக்குகளைக் கொண்ட ரகசியப் பாதை:

  1. பிரபஞ்ச உருவாக்கம் (Cosmic Evolution)
  2. சாதகனின் அக யோகப் பயணம் (Inner Yogic Evolution)
  3. அறிவு ஞானம் (Total Realization)

ஒரு வரியில் பாடலின் விளக்கத்தைச் சொன்னால் அகண்ட ஒன்றான பரமசிவம் பல்வேறு வெளிப்பாடுகளாக வெளிப்பட்டு மறுபடியும் பூர்ண உணர்வாக திரும்புதலை எட்டு நிலைகளில் திருமூலனார் விளக்கியுள்ளார்.

இனிப் பாடலை திருமூலரை குருவாக எண்ணிப் படியுங்கள்:

பழந்தமிழ் வடிவ மூல மந்திரம்
ஒன்றவன் தானே இரண்டவன் இன்னருள்
நின்றனன் மூன்றினுள் நான்குணர்ந் தான்
ஐந்து வென்றனன் ஆறு விரிந்தனன்
ஏழும்பர்ச் சென்றனன் தானிருந் தான் உணர்ந் தெட்டே.
சந்தி பிரித்த வடிவம்
ஒன்று அவன் தானே
இரண்டு அவன் இன்னருள்
மூன்றினுள் நின்றான்
நான்கு உணர்ந்தான்
ஐந்து வென்றான்
ஆறில் விரிந்தான்
ஏழு உம்பர்ச் சென்றான்
எட்டில் உணர்ந்திருந்தான்.
யோக ஆகம தந்திர விளக்கவுரை

இப்போது ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு என்று ஏதோ திருமூலர் கணக்குச் சொல்கிறார், அந்தக் கணக்கு என்னவென்று பார்ப்போம்.

🔱 1. ஒன்று அவன் தானே

இது ஏகமான பரமசிவன் — நிர்குணம், நிராகாரம், ஆதியுமின்றி அந்தமுமின்றி இருக்கும் அத்வைத நிலை இங்கு இன்னும் சக்தி வெளிப்படவில்லை. "அவன் - பரசிவன்" மட்டும் — சுத்த சிவ நிலை.

🔱 2. இரண்டு அவன் இன்னருள்

ஒன்றாக இருந்த அவன் இன்னருள் வெளிப்படும் போது இரண்டாகிறான். குலார்ணவ தந்திரம்: "ஶிவ ஶக்தி யுக்தோ" — சக்தியுடன் சேர்ந்தாலே சிவன் செயல்படுவான். ஶக்தி செயல் பட வெளிப்படும் நிலை. இங்கு "இன்னருள்" = அனுக்ரஹ சக்தி. பிரபஞ்சம் உருவாகும் முதல் அலை வெளிப்பட்டுவிட்டது.

🔱 3. மூன்றினுள் நின்றான்

வெளிப்பட்ட அனுக்கிரஹ சக்தி மூன்று முக்கிய சக்திகளாக அதனுள் நின்று செயல் கொள்கிறார்.

  • இச்சா (Will)
  • ஞானம் (Knowledge)
  • கிரியா (Action)

"நின்றான்" = நிலைபெற்றான் என்பதன் மூலம் இந்த மூன்று சக்திகளுக்குள்ளும் அவன் - சிவன் நிற்பதால் படைப்பு இயக்கம் தொடங்குகிறது.

🔱 4. நான்கு உணர்ந்தான்

மூன்று சக்தியிற்குள் நின்று எப்படி உணர்கிறான்? சதுர் அவத்தைகள் மூலம்.

  • ஜாக்ரத் (விழிப்பு)
  • ஸ்வப்ன (கனவு)
  • சுஷுப்தி (ஆழ்ந்த உறக்கம்)
  • துரியம் (அதீத நிலை)

ஒன்றாக இருந்து இரண்டாக இன்னருளை வெளிப்படுத்தி மூன்றாக நின்று நான்கா உணர்ந்தவன் இப்போது ஐந்தாக வென்றான்.

🔱 5. ஐந்து வென்றான்

ஐந்தாக என்பதை ஐந்தொழில்களாகவும், ஐம்பூதங்களாகவும் வெளிப்பட்டதாக உணரலாம்.

(A) பஞ்சகிருத்த்யம்:

  • சிருஷ்டி (Creation)
  • ஸ்திதி (Preservation)
  • சம்ஹாரம் (Dissolution)
  • திரோபாவம் (Concealment)
  • அனுக்ரஹம் (Grace)

(B) பஞ்சபூதங்கள்:

  • நிலம், நீர், தீ, காற்று, ஆகாசம்

"வென்றான்" என்றால் இவற்றை எல்லாம் கடந்தவன். இந்த ஐந்துவரை பிரபஞ்சத்தின் செயலை விளக்கிய திருமூலர் எப்படி சிவன் உடலிற்குள் பரிணமிக்கிறான் என்ற உண்மையை அடுத்த வரியில் சொல்கிறார்.

🔱 6. ஆறில் விரிந்தான்

உடலிற்குள் சிவன் ஆறு சக்கரங்களுக்குள் விரிந்து:

  • மூலாதாரம்
  • ஸ்வாதிஷ்டானம்
  • மணிபூரகம்
  • அனாஹதம்
  • விஷுத்தி
  • ஆஜ்ஞா

என சக்தி இவற்றில் விரிகிறது. "விரிந்தான்" என்றால் சிவனின் சக்தி மனித உடலிற்குள் பரவும் முறை ஆறாக இருக்கிறது என்று கூறுகிறார். இப்படி ஆறாக விரிந்த சக்தி மீண்டும் எப்படி ஒடுங்குகிறது என்ற இரகசியத்தை அடுத்த வரியில் கூறுகிறார்.

🔱 7. ஏழு உம்பர்ச் சென்றான்

உடலிற்குள் ஆறாக விரிந்த சக்தி மீண்டும் உயர்வு பெற்று தேவ நிலை பெற அது ஏழாக மேலே செல்ல வேண்டும்.

ஏழு உலகங்கள்:

  • பூ, புவ, சுவ, மக, ஜன, தபோ, சத்ய என்ற நிலைகளில்.

"உம்பர் சென்றான்" என்றால் மீண்டும் ஜீவனாக ஆறாக விரிந்த சீவன் சிவமாக மேலான சுத்த நிலைகளில் எழுச்சி பெறும் நிலை ஏழு. இந்த ஏழு நிலை எழுச்சியை எப்படி உணர்வது?

🔱 8. எட்டில் உணர்ந்திருந்தான்

அஷ்ட மூர்த்த வடிவங்களினூடாக யோகத்த்தில் உணரும் நிலை

  1. பூமி
  2. நீர்
  3. தீ
  4. காற்று
  5. ஆகாசம்
  6. சூரியன்
  7. சந்திரன்
  8. ஜீவன்

ஜீவனைத் துணைகொண்டு சூரிய சந்திர நாடிகளை இயக்கி பஞ்ச பூதங்களை பேதித்தல் மீண்டும் பரசிவ நிலையை அனுபவத்தில் உணரலாம் என்று திருமூலம் முதல் பாடலிலேயே மற்றைய மூவாயிரம் பாடலும் எதற்காக என்ற உண்மையை விளக்கி விடுகிறார்.

திருமூலர் இந்தப் பாடலில் கூறும் பிரபஞ்ச உருவாக்கம் என்பது, ஆதியில் ஒரே பரமசிவம் (ஒன்று) தன்னுள் சக்தியாக இரண்டாக வெளிப்பட்டு, இச்சா–ஞான–கிரியா எனும் மூன்று சக்திகளால் படைப்பின் இயக்கத்தைத் தொடங்கி, அதன் பின்னர் சித்தத்தின் நான்கு நிலைகளையும் உருவாக்கி அனுபவத்தை அமைத்து, பஞ்சபூதங்களாக உலகத்தை வெளிப்படுத்தி, அந்த சக்தி ஆறு சக்கரங்களாக உயிர்களில் விரிந்து, ஏழு உலகங்களாக உயர்ந்த நிலைகளில் பரவி, இறுதியில் அஷ்டமூர்த்தி வடிவில் அனைத்திலும் தன்னை உணர்ந்து நிற்கும் முழுமையான பிரபஞ்சமாக வெளிப்படுகிறது;

அதாவது, ஒரே சுத்த சிவம் பல்வேறு நிலைகளாக விரிந்து, மீண்டும் அனைத்திலும் தன்னை அறிந்து நிற்கும் சிவ-சக்தி விளையாட்டே இந்தப் பிரபஞ்ச உருவாக்கமாகும்.

🧘
பகுதி 2 சிவானுபவம் தரும் திருமந்திர எழுத்து சாதனை

அன்பர்களே,

நீங்கள் திருமந்திரத்தின் ஒரு மந்திரத்திற்கான பொருளையும், அதன் யோக–ஆகம–தந்திர விளக்கத்தையும் வாசித்துள்ளீர்கள்.

ஆனால், உங்களிடம் ஒரு கேள்வி…

திருமந்திரத்தைப் பற்றி அறிந்தீர்களா?
அல்லது
திருமந்திரத்தை அனுபவிக்கத் தொடங்கிவிட்டீர்களா?

இவை இரண்டும் ஒன்றல்ல.

திருமூலர் அருளிய ஒவ்வொரு திருமந்திரமும், வெறும் பாடல் அல்ல; ஒரு வருட தவத்தின் அனுபவச் சுருக்கம். அந்த அனுபவத்தை வெறும் வாசிப்பால் மட்டுமே முழுமையாகப் பெற முடியாது. அறிவு வழியைக் காட்டும்; ஆனால் சாதனையே அந்த வழியில் நம்மை நடத்தும்.

அதனால்தான், எமது குருநாதர் அகஸ்திய குலபதி ஸ்ரீ ஸக்தி சுமனன் அவர்கள், திருமந்திரத்தை வெறும் நூலாக அல்ல, வாழ்வாக மாற்றும் ஒரு தனித்துவமான சாதனை முறையாக திருமந்திர எழுத்துச் சாதனையை வகுத்துத் தந்துள்ளார்.

இந்த எழுத்துச் சாதனை என்பது,

ஒரு புத்தகத்திலிருந்து இன்னொரு புத்தகத்திற்கு சொற்களை நகலெடுக்கும் செயல் அல்ல.

இது,

  • ஒவ்வொரு நாளும் ஒரு மந்திரத்தோடு அமைதியாக அமர்ந்து வாழ்வைச் சந்திப்பது.
  • ஒவ்வொரு எழுத்தையும் விழிப்புணர்வுடன் பதித்து மனதை ஒருமுகப்படுத்துவது.
  • ஒவ்வொரு வரியிலும் திருமூலரின் அருள்வாக்கை உள்ளத்தில் பதிப்பது.
  • "நான் செய்கிறேன்" என்ற அகந்தையிலிருந்து "அருள் செயல்படுகிறது" என்ற பணிவிற்குள் மனதை மெதுவாக மாற்றுவது.
  • அறிவை அனுபவமாகவும், அனுபவத்தை வாழ்க்கையாகவும் மாற்றும் ஒரு யோகப் பயணம்.

நாள்தோறும் ஒரே ஒரு மந்திரத்தை மட்டுமே எழுதும் இந்த ஒழுக்கம், மனத்தின் அவசரத்தைக் குறைத்து, பொறுமையையும், கவனத்தையும், உள்ளுணர்வையும் வளர்க்கிறது. காலப்போக்கில், திருமந்திரம் ஒரு நூலாக உங்கள் கையில் இருப்பதில்லை; அது உங்கள் சிந்தனையிலும், சொல்லிலும், செயலிலும் வெளிப்படத் தொடங்கும்.

திருமந்திரத்தைப் படித்தவர்கள் பலர் இருக்கலாம்.

திருமந்திரத்தை வாழ்ந்தவர்கள் சிலரே.

அந்த அரிய சாதகர்களின் வரிசையில் நீங்கள் இணைவதற்கான அழைப்பே திருமந்திர எழுத்துச் சாதனை.

நீங்களும் இந்த அருள் யாத்திரையில் இணைந்து,

ஒவ்வொரு நாளும் ஒரு மந்திரம்,

ஒவ்வொரு மந்திரத்திலும் ஒரு புதிய விழிப்பு,

ஒவ்வொரு விழிப்பிலும் சிவத்தை நோக்கிய ஒரு புதிய படி எடுத்து வையுங்கள்.

வாருங்கள்!

திருமந்திரத்தை வெறும் வாசிப்பதிலிருந்து, அதை வாழும் ஆன்மிகப் பயணத்திற்கு ஒன்றாக முன்னேறுவோம்.

திருமந்திர அரண்மனை – உலகளாவிய திருமந்திர குருகுலம்

திருமந்திர எழுத்துச் சாதனையில் இணைந்து கொள்ள விரும்புபவர்கள், கீழ்வரும் விண்ணப்படிவத்தை நிரப்பி திருமந்திர அரண்மனை திருமூலர் குருகுலத்தில் இணையுங்கள்.

📝 விண்ணப்படிவம் →