அகஸ்திய குலபதி ஸ்ரீ ஸக்தி சுமனன்
பாயிரம் · மந்திரம் 4

அந்தர்யாமியை உணரும் அகநெறி

புற வழிபாட்டிலிருந்து அக வழிபாட்டிற்கு அழைத்துச் செல்லும் திருப்புமுனை
📜
பகுதி 1 ஸ்ரீ ஸக்தி சுமனனின் யோக ஆகம தந்திர அனுபவ விளக்கவுரை

சிவசிவ. நற்றுணையாவது நமச்சிவாயவே!

திருமந்திரப் படிகட்டு: 04

அந்தர்யாமியை உணரும் அகநெறி

சிவஞானச் செல்வர்களே! திருமூல தேவர் தன் தவ வலிமையால் சமைத்த மூவாயிரம் ஞானப் படிக்கட்டுகளில், நாம் இன்று நான்காவது படியில் கால் வைக்கிறோம். இது புற வழிபாட்டிலிருந்து அக வழிபாட்டிற்கு (Internalization) நம்மை அழைத்துச் செல்லும் முக்கியமான திருப்புமுனை.

மூல மந்திரம்
ஒக்கநின் றானை உலப்பிலி தேவர்க
ணக்கனென் றேத்திடு நாதனை நாடொறும்
பக்கநின் றாரறி யாத பரமனைப்
புக்குநின் றுன்னியான் போற்றிசெய் வேனே.

சந்தி பிரித்தால்:

ஒக்க நின்றானை உலப்பிலி தேவர்கள்
நக்கன் என்று ஏத்திடு நாதனை நாள்தொறும்
பக்கம் நின்றார் அறியாத பரமனைப்
புக்கு நின்று உன்னி யான் போற்றி செய்வேனே
பதவுரை & ஆகம விளக்கம்

ஒக்க நின்றானை: பிரபஞ்சத்தின் அணுக்கள்தோறும் நீக்கமற, சமமாக, கலந்து நிற்பவனை. (விஸ்வமயமாக விளங்குபவன்).

உலப்பிலி தேவர்கள் நக்கன் என்று ஏத்திடு நாதனை: அழிவற்ற தேவர்கள் இறைவனை "நக்கன்" என்று போற்றுகின்றனர். 'நக்கன்' என்பது திகம்பரன் – அதாவது திசைகளையே ஆடையாகக் கொண்டவன். பற்றுக்களற்ற, உருவமற்ற பரவெளி என்பது பொருள்.

நாள்தொறும் பக்கம் நின்றார் அறியாத பரமனை: இது மிக நுட்பமான இடம். இறைவனுக்கு மிக அருகில் நின்று புறக்கிரியைகளைச் செய்பவர்கள்கூட, அவனது உண்மையான சொரூபத்தை உணர்வதில்லை. ஏனெனில் அவன் வெளியிலில்லை, உள்ளே இருக்கிறான்.

புக்கு நின்று உன்னி யான் போற்றி செய்வேனே: "புக்கு" என்றால் புகுதல் (Entry). என் அக வெளியினுள் நான் புகுந்து, அங்கு நிலைபெற்று (நின்று), அவனைத் தியானிப்பேன் (உன்னி). இதுவே மெய்யான சிவத்தை அறியும் வழி.

ஆகம-தந்திர ரகசியம்: "புக்கு நின்று உன்னி"

இந்த மந்திரத்தில் வரும் "புக்கு நின்று உன்னி" என்ற தொடர், கிரியா மார்க்கத்திலிருந்து ஞான மார்க்கத்திற்கு மாறும் வித்தையை சொல்கிறது. சிவாகமங்கள் பூசையை இருவகைப்படுத்தும்:

  • பகிர் பூசை (External Worship): பிம்பங்களில் செய்யும் வழிபாடு.
  • அந்தர் பூசை (Internal Worship): இதய கமலத்தில் சிவத்தைப் பிரதிஷ்டை செய்து செய்யும் வழிபாடு.

காமிக ஆகமம் இதனை "ஆத்மலிங்க பூசை" என்று குறிப்பிடும். அதாவது, தன்னைச் சிவமாக பாவித்துப் பூசித்தல் (சிவோகம் பாவனை). வெளியே தேடுபவர்களுக்குச் சிவம் எட்டாக்கனி; உள்ளே புகுந்து தேடுபவர்களுக்கு அவன் எளியவன்.

இந்தப் பாடலின் ஞானச் சுருக்கம்
  • சிவம் எங்கே? அவன் அனைத்திலும் சமமாகக் கலந்து நிற்கும் "அந்தர்யாமி".
  • தடை எது? இறைவனைப் புறத்தில் மட்டும் தேடும் 'துவைத' பாவம் (இரண்டாகப் பார்க்கும் நிலை). அருகில் நின்றாலும் அவர்கள் அவனை அறியார்.
  • வழி எது? அறிவால் தர்க்கம் செய்யாமல், ஆன்ம அனுபவத்தால் (Intuition) அவனை அணுகுதல்.

இறைவன் நமக்குப் பக்கத்தில் இருப்பவன் அல்ல, நமக்குள் இருப்பவன். நாம் வெளி உலகை நோக்கிப் பார்ப்பதை நிறுத்திவிட்டு, நமக்குள் "புக்கு" (நுழைந்து) பார்த்தால், அங்கே "நக்கனாய்" (நிர்வாணப் பரம்பொருளாய்) ஆதிநாதன் வெளிப்படுவான்.

திருமூலர் 03 வது மந்திரத்தில் தெளிவாக சிவத்தை உணரும் நெறி அகத்தில் பயணிக்கும் தியான நெறி என்பதை தெளிவாகச் சொல்லி எம்மை அகப்பயணத்தை ஆரம்பிக்கச் சொல்கிறார்!

அன்பர்களே, உங்களில் எத்தனை பேர் புறக்கிரியையில் மாத்திரம் சிக்கிக் கொண்டிருக்கிறீர்கள்? சிறிது நேரமாவது புக்கு நின்று உன்னி அகத்தில் பயணிக்கிறீர்களா? புறக்கிரியையில் மாத்திரம் நின்றால் சிவானுபவம் பெற முடியாது என்பது விளங்குகிறதா? இந்தப் பாடலில் நமக்குத் தெளிவான ஒரு உபதேசத்தைத் தந்திருக்கிறார் நாம் எல்லோரும் சிவானுபவம் பெற வேண்டும் என்றால் புறக்கிரியை மாத்திரம் போதாது, உள்ளே சென்று அகத்தில் அறியும் மார்க்கத்தை அறிந்து கொள்ள வேண்டும் என்று!

உரையாடுங்கள்! இன்னும் 2996 படிகள் ஏறவேண்டும், களைப்புத் தெரியாமல் இருக்க, சோர்வுறாமல் இருக்க உரையாடுவது உற்சாகம் தரும்! கண்களை மூடி அமர்ந்து திருமூலர் சமைத்த பரசிவத்தை நோக்கிய அந்தப் படிக்கட்டுகளில் 04 வது படிக்கட்டில் நிற்பதாக மகிழ்ச்சியுறுங்கள்! ஏனென்றால் சிவன் நந்தியில் அமர்ந்தார் என்பதன் சூட்சும விளக்கம் ஆனந்தமான மனதில் உணர்வில் அமர்பவர் என்பதே! எம்முள் மகிழ்ச்சியும், ஆனந்தமும் பெருகுவது சிவன் எம் உணர்வில் அமர்வதன் அறிகுறி! பரசிவத்தின் பேரொளி நம் அனைவருக்குள்ளும் பிரகாசிக்கட்டும்! அடுத்த பதிவில் திருமூலரின் அகப்பயணத்தைப் பற்றியவொரு சுவாரசியமான விஷயத்தைக் கூறுகிறேன். திருச்சிற்றம்பலம்.

🧘
பகுதி 2 சிவானுபவம் தரும் திருமந்திர எழுத்து சாதனை